நேத்து அவன் சாப்பிட்ட தட்டுல நான் இண்ணக்கி சாப்பிட்டுகிட்டிருப்பேன். நேத்து நான் தண்ணி குடிச்ச கிளாஸ்ல இண்ணக்கி வேறொருத்தன் தண்ணி குடிச்சுகிட்டிருப்பான். சில தடவ அவங்கள்ள ஒருத்தன் சட்டய நானும், என் சட்டய யாராவது ஒருத்தனும் மாத்திப் போட்டுக்கிட்டு ஆஃபிஸ் போயிருக்கோம். ஓரே பாயிலதான் நாலஞ்சு பேரா ஒண்ணாப் படுத்துக் கிடப்போம். அவங்களெல்லாம் என்ன ஜாதின்னு எனக்குத் தெரியாது. நான் என்ன ஜாதின்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல.
இப்படி ஜாதி பாராம ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஒட்டி உறவாடுற ஒரு நட்பு வட்டாரத்த சந்திக்கிறதுக்கு சுமார் 25 வருசம் நான் காத்திருக்க வேண்டியதிருந்திருக்கு.
கந்தசாமி, வேலையா, ராஜுகுட்டி, ராஜா, சிவா, பிரபு, சத்தியக் குமார், முத்துச் செல்வன், - இவங்கதான் என்னோட சின்னவயசு நண்பர்கள்.
இவங்க எல்லாருமே என் கூட படிச்சவங்க கிடையாது. பொரும்பாலோர் என் கூட படிச்சவங்க, சிலர் என் வயசுக்கு சற்று மூத்தவங்க. ஆனா இவங்கதான் பள்ளிலயும், பள்ளிக்கு வெளிலயும் என்னோட பழகுன பாலிய காலத்து நண்பர்கள். அப்ப எங்க அம்மா கூட செலவளிச்ச நேரத்த விட நான் இவங்க கூட செலவளிச்ச நேரந்தான் அதிகம்.
இவங்களுக்குள்ள எத்தனையோ முரண்பாடுகள் இருந்திருக்கலாம், அனா இவங்க எல்லாருக்குள்ளயும் ஒரு ஒத்தும இருந்துச்சு. அதுதான் ஜாதி.
நான் ஏறகனவே சொன்னமாதிரி எங்க வீடுங்கிறது, ரெண்டு ஜாதிகள் சத்திக்கிற வெவ்வேறு தெருக்களின் எல்லைல இருந்துச்சு. எங்க வீட்டுக்குக் கீழ்புறமா உள்ள தலித்துகளின் தெருல இருந்தும் சில நண்பர்கள் என்னோட படிச்சிருக்காங்க. ஆனாலும் நான் பள்ளி நேரம் தவிர மற்ற நேரங்கள்ள அவங்களோட ஒண்ணுகலந்து விளையாடினதில்ல.
இப்ப யோசிச்சுப் பாத்தா எங்க வீடு இருந்த அமைப்புக்கு நான் தலித் நண்பர்களோடதான் அதிகம் உறவாடி இருக்கணும். ஆனா நான் மேற்கு திசைய நோக்கியே ஈர்க்கப் பட்டிருக்கேன். ஆனாலும் கீழக் கடையத்தின் மேற்கு எல்லையான மெயின் ரோட்டத் தாண்டி என் நட்பு வட்டாரங்கிறது விரியவே இல்ல.
இத ஏன் நான் இவ்வளவு வெவரமாச் சொல்றேன்னா தெருக்கள் ஜாதி வாரியா அமைக்கப்பட்டிருக்கிற கிராம சூழல்ல ஒரு பையன் தன் சொந்த ஜாதியத் தாண்டி மற்ற நபர்களோட பழகுறதுங்கிறது அவ்வளவு தடை நெறஞ்சதா இருந்திருக்கு, இண்ணைக்கும் அது அப்படித்தான் இருக்குது.
ஒண்ணுல இருந்து அஞ்சாவது வரைக்கும் நான் பக்கத்துல உள்ள R.C. ஸ்கூல்ல தான் படிச்சேன். அங்கதான் முத்துக்குமார், சிவராமன், போன்ற தலித் பையன்களோட நண்பர்களாகுறதுக்கான வாய்ப்பு கிடைச்சுது. ஆனாலும் அத ஒரு ஆழமான நட்புன்னு சொல்ல முடியாது. அவங்க என்னோட வகுப்புல இருந்தாங்க நான் அவங்களோட பழகிக்கிட்டேன். மற்றபடி பள்ளி விட்டதுக் கப்புறம் நான் விளையாண்டது உறவாடுனது எல்லாமே நான் மொதல்ல சொன்ன நண்பர்களோட மட்டும்தான்.
பள்ளிக்கூடமுன்னு ஒண்ணுமட்டும் இல்லாமப் போயிருந்தா நாங்க அந்த வயசுல அந்த அளவுகூட சாதி தாண்டி சந்திச்சிருக்குறதுக்கான வாய்ப்பே இல்லாம போயிருக்கும். ஒரே பெஞ்சுல பக்கத்துல பக்கத்துல உக்காந்து பேசுறதுக்கான சந்தற்பமும் ஏற்பட்டிருக்காது. உண்மைலயே பள்ளிக் கூடந்தான் ஒருநாளின் பெரும் பகுதில, வெவ்வேறு ஜாதி மாணவர்கள ஒண்ணாச் சேத்து கட்டி வச்சிருந்துச்சு.
ஆனாலும் அந்தப் பள்ளி கீழக்கடையத்துக்கு நடுவுல இருந்ததால அங்க மெஜாரிட்டியா இருந்தது ஒரு காஸ்ட் மட்டுந்தான். மேலக்கடையத்துல இருந்து வந்து படிச்ச வேற்று ஜாதி பையங்களும் ஒருசிலர்தான். அதனால அங்கையும் ஒரு எல்லை மீறிய நட்பு வட்டாரங்கிறது எனக்கு சாத்தியமில்லாமதான் போச்சு.
கடையத்த ரெண்டா வகுடெடுத்துப் பிரிச்சுக்கிட்டுப் போற மெயின் ரோட்டுக்கு அந்தப்புறமா, மேல் கோடில இருக்கு சத்திரம் ஸ்கூலு. அஞ்சுக்கு மேல படிக்கணுன்னா எல்லாரும் அங்கதான் போயாகணும். அந்த வட்டாரத்துலயே அது தான் பிரதானமான மேல்நிலை பள்ளி ங்கிறதால கடையத்தின் வெவ்வேறு தெருக்கள்ள இருந்தும், கடையத்தைச் சுற்றிய வெவ்வேறு கிராமங்கள்ள இருந்தும் பலதரப்பட்ட மாணவர்களும் ஒரே வகுப்புக்குள்ள அடைக்கப் பட்டிருந்தோம். ஏன்னா நான் ஆறாவது போனப்ப அந்த வகுப்புல இருந்த இருக்கைகள விட அங்க இருந்த மாணவர்களின் எண்ணிக்க ரொம்பவே அதிகம்.
ஆனா அங்கதான் ஜாதிய எல்லைகளத் தாண்டிய சற்று விசாலமான நட்பு வட்டாரம் உருவானுச்சு. தங்கவேல், பூது, செந்தில் வேல் ராஜன், நிஜாமுதீன், பூவேந்திரன், செல்வ குமார், ன்னு பலரும் பல திசைகள்ள இருந்தும் வந்து ஜாதி தெரியாமலே உறவாடுறதுக்கான சந்தற்பம் கிடைச்சுது. ஆனாலும் பள்ளிக் கூடம் விட்டு வீட்டுக்கு வந்ததுக்கப்புறம், பைக்கட்ட வீசிட்டு நான் விளையாடப் போறது எங்க தெரு நண்பர்களோட மட்டுந்தான்.
ஆறாவதுல இருந்து பன்னிரெண்டாவது வரைக்கும், இதுக்கு இடைல ஒரு வருசம் பெயிலானதையும் சேத்தா மொத்தம் 8 வருசம், வெவ்வேற ஜாதி,மதங்கள செர்ந்த நண்பர்கள்ட்ட பழகி இருக்கேன். ஆனாலும் நான் மொதல்ல சொன்ன நண்பர்கள் மாதிரி இவங்க யாரும் ஒரு அழுத்தமான நட்ப எனக்குள்ள உருவாக்கினதில்ல. அல்லது நானே உருவாக்கிகிட்டதில்ல.
நண்பன் செந்தில் வேல் ராஜனோட நான் பள்ளிப் படிப்பெல்லாம் முடிச்சு பல வருசத்துக்கப்புறம் 2006 ல சென்னைல, ஒண்ணாத் தங்கினப்பதான் அதிக நெறுக்கமானேனே தவிர அதுக்கு முன்னால அந்த நெறுக்கம் இருந்ததில்ல.
என் வாழ்க்கையின் முதல் 25 வருஷங்கள வெட்டிப் பாத்தோமுன்னா அதுல பெரும்பகுதி ஒரே ஜாதிப் பையன்களின் நட்பு வட்டாரம் மட்டும்தான் பிரதானமா இருந்திருக்கு.
ஆனா 2006 ல சென்னை வந்ததுக்கு அப்புறம்தான் ஜாதி பேதமில்லாம, ஒண்ணாத் தங்கி, ஒண்ணாச் சாப்பிட்டு, ஒரே ரூமுக்குள்ள ஒண்ணா வாழ்றதுக்கான வாய்ப்புகள் கிடைச்சுது.
தங்கி இருந்த இடத்துலயும் சரி, வேல பாத்த இடத்துலயும் சரி, ஜாதி ங்கிறது நட்புக்கான எல்லையா இருந்ததே இல்ல. இந்த மாற்றத்த கொடுத்தது சென்னை வாழ்க்க.
பல நேரங்கள்ள நான் கூட நெனச்சதுண்டு
“என்னடா ஊரு இது . . .?
குளிக்கதுக்கு நல்ல ஆறு கெடையாது . . .
ஒரு மலையோ, அருவியோ பக்கத்துல கெடையாது . . .
எல்லாத்தையும் செயற்கையா செஞ்சு வச்சு வியாபாரம் பண்ணிக்கிட்டிருக்காங்க.
நிச்சயம் நமக்கு கல்யாணமுன்னு ஒண்ணு நடந்து, குழந்த குட்டியெல்லாம் பொறந்தா,
அவங்கள நாம படிச்ச ஸ்கூல்லதான் படிக்க வக்கணும் . . .
நாம வாழ்ந்த வாழ்கையத்தான் வாழ வைக்கணும் . . .
அந்த ஊரோட அழகுக்கும், அமைதிக்கும் ஈடாகுமா இந்த சாக்கடை நகரம் . . ?”
ன்னு கல்யாணத்துக்க்கு முன்னால பல தடவ நெனச்சிருக்கேன்.
ஆனா என் பொண்ணு இப்ப சென்னைலதான் படிக்கிறா. அப்ப நான் நெனச்சமாதிரியான வாழ்கையை எல்லாம் இப்ப நான் அவளுக்குக் கொடுக்க முடியல.
இங்க வர்கபேதம் ங்கிறது பெருசா இருக்கு. ஆனாலும் ஜாதி பேதம் அதிகமா இல்ல. நான் படிச்சத விட ஒரு நல்ல சூழல்லதான் அவ இண்ணக்கி படிக்கிறதா தோணுது. என்னோட 25 வருச காத்திருப்பு அவளுக்கு இல்லவே இல்ல.
2007ல K.K நகர்ல ஜானண்ணன், கீர்த்தி, கிருபா, திலிப், யோக ராஜ், சோலையண்ணன், இவங்களோட வாழ்ந்தப்பதான், ஜாதி, மதம் ங்கிற ரெண்டு பெரும் தடைகள ஒடச்சு, ஒண்ணா உறவாடறதுக்கான வாய்ப்பு கெடச்சுது.
இண்ணக்கி கலப்புத் திருமணங்களப் பத்தி பெருசாப் போசுறோம், மீடியாக்கள்ள விவாதிக்கிறோம், ஆனா கலப்பு நட்பு ங்கிறதே கடந்த காலத்துல சாத்தியமில்லாத ஒண்ணாத்தான் இருந்திருக்கு.
அபூர்வமா சிலர், தொழில் முறைக் காரணங்களுக்காகவோ, அல்லது வேறு காரணங்களுக்காகவோ ஜாதி மதங்களத் தாண்டி கடந்த காலத்துல நட்பு பாராட்டி இருக்கலாம். ஆனாலும் அவங்க ஒரே இடத்துல தங்கி, ஒரே இடத்துல வாழ்ற இன்றைய பேச்ச்சுலர் வாழ்க்கைய கனவுல கூட நெறுங்கியிருக்க முடியாது.
அதனால கலப்பு நட்புக்கான களமா, கிராமங்கள விட நகரமும், கடந்த காலங்கள விட நிகழ்காலமுந்தான் இருக்குது.
2007ல எங்களுக்குள்ள ஜாதி பாத்துக்கிறதில்லன்னு சொன்னேன், ஆனா ஒரு விசயம், அப்ப எங்களுக்குள்ள ஒரு தலித் பையனும் இல்ல, ஒரு அய்யர் பையனும் இல்ல. இது மட்டும் அங்க இருந்த எல்லாருக்குமே தெரியும்.
வேல செய்யற இடத்துல இந்த நெலம இல்லன்னாலும். ரூம்ல தலித்துகளும், அய்யர்களும் இல்லாத இடைப்பட்ட ஜாதிகள்தான் கலந்திருந்துச்சு. ஒரு வேள தலித்துகள நாங்க ஒதுக்கி இருக்கலாம், அதே மாதிரி அய்யர்கள் எங்கள ஒதுக்கி இருக்கலாம். இது யாரும் திட்டமிட்டு நடக்கல ஆனாலும் இப்படித்தான் இருந்துச்சு அண்ணய நெலம.
அதுக்கப்பறம் 2008ன் தொடக்கத்துல வேற சில நண்பர்களோட அரும்பாக்கத்துல தங்கியிருந்தேன். அங்கயும் இதே நெலமதான்.
இத ஏன் சொல்றேன்னா ‘கலப்பு நட்பு’ ன்னு சொல்றேனே தவிர அதுல கூட ஒரு எல்லை இருந்துச்சு ங்கிறதுதான் உண்ம.
நான் வாழ்ந்த அறையின் சூழல் இப்படிப்பட்டது தான், பிற நண்பர்களுக்கு இத விட விரிவான ஒரு கலப்பு நட்புக்கான களம் கெடச்சிருக்கலாம். அத ஒரு பேச்சுலர் ரூமோ, அல்லது மேன்ஷனோ கொடுத்திருக்கலாம். ஆனாலும் என்னோட அனுபவந்தான் பெரும்பாலோருக்கு ஏற்பட்டிருக்குமுன்னு நெனக்கிறேன்.
இது எதேச்சையா நடந்தது இல்ல இதுக்குள்ள ஒரு நீண்ட கால ஜாதியப் பாரம்பரியம் இருக்குன்னுதான் தோணுது. ஒரு அய்யர் பிற ஜாதி களையும், பிற ஜாதிகள் தலித்துகளையும் ஒதுக்கி வைக்கிறதான தீண்டாமையின் மிச்சமாத்தான் இது நடந்திருக்கணும்.
இந்த நெலம இண்ணக்கி வேல பாக்குற எடங்கள்ள உடைபட்டிருக்கு. இந்த உடைப்பு பெரிய விதத்துல நாளைக்கு நடக்குங்கிற நம்பிக்க எனக்கு இருக்கு.
கலப்புத் திருமணங்களப் போல கலப்பு நட்பும் ஜாதி, மத அமைப்புகள ஒடச்சி ஒண்ணு கலக்குறதுக்கான வாய்ப்ப நிட்சயம் ஏற்படுத்தும். அந்த நட்புறவு ஜாதி மதங்களத் தாண்டிய கலப்புத் திருமணங்கள கோ
கேஷுவலா எடுத்துக்கிறதுக்கான பொது மனோநிலைய சமூகத்துல உருவாக்கும். அண்ணக்கி ஆயிரம் ராமதாசுகள் வந்து தடுத்து நிறுத்துனாலும் அது நிக்கப் போறதில்ல. காலத்தின் பிரம்மாண்ட சக்கரம் இந்த தூசிகள அடிச்சுத்தள்ளிட்டு அதன் பாதைல நிதானமா பயணிக்கும் ங்கிற நம்பிக்க எனக்கு ஆழமா இருக்கு.
ஆனாலும் காத்தடிக்கிற வரையிலும் காத்திருக்க முடியாது. நம்மால ஆன துடுப்புகள போட்டு கிட்டேதான் இருக்கணும்.
மாற்றம் ங்கிறது நகர்றது மட்டுமில்ல நகர்த்தப் படுறதுந்தான்.
காத்தடிக்கிற வரையிலும் காத்திருக்க முடியாது
Reviewed by Sumankavi
on
3:42 AM
Rating:
மாற்றம் ங்கிறது நகர்றது மட்டுமில்ல நகர்த்தப் படுறதுந்தான்!!! அருமை!
ReplyDelete